செய்திகள்
போலி சாதி சான்றிதழ்: பெண் எம்.பி.க்கு மும்பை உயர்நீதிமன்றம் ரூ. 2 லட்சம் அபராதம் விதிப்பு
மகாராஷ்டிராவைச் சேர்ந்த எம்.பி. ஒருவருக்கு போலிச் சான்றிதழ் அளித்த விவகாரத்தில் கோர்ட் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
பிரபல தெலுங்கு நடிகை நவ்னீத் கவுர் (வயது 35), தமிழில் அரசாங்கம், அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற படங்களில் நடித்துள்ளார். ஏழு மொழிகளில் பேசும் திறமை பெற்ற நவ்னீத் 2019 லோக்சபா தேர்தலில் அமராவதி லோக்சபா தனி தொகுதியில் சுயேட்சை எம்.பி.யாக போட்டியிட்டார். இவருக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவு அளித்தையடுத்து வெற்றி பெற்று லோக்சபா எம்.பி. ஆனார்.
இந்நிலையில் இவரிடம் தோல்வியுற்ற சிவசேனா கட்சி வேட்பாளர் ஆனந்தராவ், மும்பை உயர்நீதிமன்ற் நாக்பூர் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதில் நவ்னீத் கவுர், தன்னை பட்டியலினத்தவர் என போலியான சாதி சான்றிதழ் கொடுத்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கின் அப்பீல் விசாரணை மும்பை உயர்நீதிமன்றத்தில் இன்று நடந்தது. இதில் நவ்னீத் கவுரின் சாதி சான்றிதழை ஆய்வு செய்ததில், அது போலியானது என நிரூபனமானது. இதையடுத்து அவரது சாதி சான்றிதழை ரத்து செய்த உயர்நீதிமன்றம், ரூ. 2 லட்சம் அபராதம் விதித்தும், ஆறு வாரங்களுக்குள் நவ்னீத் கவுர் அனைத்து ஆவணங்களையும், நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டது.
இதற்கிடயைில் நவ்னீத் கவுர், உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்வேன் எனத்தெரிவித்துள்ளார்.