செய்திகள்
பலியான சுந்தரம்.

திருப்பூர் அருகே தங்கையை காப்பாற்ற கிணற்றுக்குள் குதித்த தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலி - விஷப்பாம்பால் உடலை மீட்பதில் சிக்கல்

Published On 2021-10-10 11:12 GMT   |   Update On 2021-10-10 11:12 GMT
சகுந்தலா மனநிலை பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
பல்லடம்:

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள சாமளாபுரத்தை சேர்ந்தவர் சின்னத்துரை. விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி சகுந்தலா (வயது 40). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 

சகுந்தலா மனநிலை பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக சகுந்தலாவுக்கு மனநிலை பாதிப்பு அதிகரித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சகுந்தலாவை பல்லடம் அருகே உள்ள தேவராயம்பாளையத்தில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சின்னத்துரை கொண்டு போய் விட்டார். 

நேற்று தேவராயம்பாளையத்திற்கு சென்ற சின்னதுரை சகுந்தலாவை  கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார்.
அங்கு மருந்து மாத்திரைகள் வாங்கிக்கொண்டு இருவரும் தேவராயம்பாளையம் வந்தனர். 

பின்னர் சகுந்தலாவை தேவராயம்பாளையத்தில் விட்டுவிட்டு சின்னத்துரை சாமாளபுரம் சென்று விட்டார்.

இந்தநிலையில் நேற்றிரவு தேவராயம்பாளையம் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் சகுந்தலா தவறி விழுந்தார். இதை வீட்டில் இருந்து பார்த்த அவரது அண்ணன் சுந்தரம் (45) தங்கையை காப்பாற்ற அவரும் கிணற்றுக்குள் குதித்தார். 

100 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் 20 அடி உயரத்திற்கு தண்ணீர் இருந்தது. அதன் பின்னர் நீண்டநேரமாகியும் இருவரும் கிணற்றில் இருந்து வெளியே வரவில்லை.

இதற்கிடையே கிணற்றுக்குள் இருந்து சுந்தரத்தின் சத்தம் கேட்கவே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கிணற்று பகுதிக்கு சென்று பார்த்தனர். அப்போது  கிணற்றுக்குள் சுந்தரமும், சகுந்தலாவும் தத்தளிப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

உடனே அவர்கள் 2 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதையடுத்து பல்லடம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தீயணைப்பு நிலைய அதிகாரி (பொறுப்பு) ரவிச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு படைவீரர்களும், போலீசாரும் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். 

அதற்குள் தண்ணீரில் மூழ்கி சகுந்தலா இறந்தார். இதையடுத்து சகுந்த லாவின் உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் சுந்தரத்தை தேடும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டனர்.  அப்போது  கிணற்ற்றுக்குள் இருந்த கண்ணாடி விரியன் பாம்பு அடிக்கடி சீறி அச்சுறுத்தியது. மேலும் இரவு நேரம் என்பதால் சுந்தரத்தின் உடலை தேடும் பணி  நிறுத்தப்பட்டது. 

இன்று காலை முதல் சுந்தரத்தின் உடலை  மீட்கும் பணி நடைபெற்றது. இந்த சம்பவம் குறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கிணற்றில் விழுந்த தங்கையை காப்பாற்ற, அண்ணனும் கிணற்றில் குதித்த நிலையில் இருவரும் உயிரிழந்து இருப்பது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News