செய்திகள்
குப்பையில் கிடந்த பச்சிளம் குழந்தையை போலீஸ்காரர் ஒருவர் மீட்ட போது எடுத்த படம்.

பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை சாக்குப்பையில் வைத்து வீசிய தாய்

Published On 2021-02-24 02:36 GMT   |   Update On 2021-02-24 02:36 GMT
பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தையை சாக்குப்பையில் வைத்து தாய் வீசிச்சென்ற சம்பவம் திருச்சி விமான நிலைய பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செம்பட்டு:

திருச்சி விமான நிலையம் அருகே காவேரிநகர் பகுதியில் உள்ள காலிமனையில் இருந்து நேற்று காலை பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. அதை கேட்ட அப்பகுதி பொதுமக்கள் உடனே இதுபற்றி திருச்சி விமான நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் விமான நிலைய நுண்ணறிவுப்பிரிவு போலீஸ்காரர் ஜெயக்குமார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தார். அப்போது, அங்கு ஒரு சாக்குப்பையில் இருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது. உடனே அந்த பையை எடுத்து பிரித்து பார்த்த போது, அதில் பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை இருந்தது.

விசாரணையில், அந்த குழந்தை 7 மாத குறைபிரசவத்தில் பிறந்ததும், அதனால் அந்த குழந்தையை அதன் தாய் சாக்குப்பையில் வைத்து வீசிச்சென்றதும் தெரியவந்தது. பின்னர், அந்த குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அந்த குழந்தை அனுமதிக்கப்பட்டது.

மேலும் இதுகுறித்து திருச்சி விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த குழந்தையை வீசிச்சென்ற கல்நெஞ்சம் படைத்த தாய் யார்? குறை பிரசவத்தில் பிறந்ததால் அந்த குழந்தையை சாக்குப்பையில் வைத்து வீசப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News