தமிழ்நாடு
பவானிசாகர் அணை

பவானிசாகர் அணை நீர்மட்டம் 103 அடியாக குறைந்தது

Published On 2021-12-25 04:48 GMT   |   Update On 2021-12-25 04:48 GMT
பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.
ஈரோடு:

பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.

அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது. கடந்த சில நாட்களாக நீலகிரியில் பரவலாக மழை பெய்ததால் பவானிசாகர் அணையின் நீர் மட்டம் உயர்ந்து வந்தது.

இதன் காரணமாக பவானிசாகர் அணை தொடர்ந்து 104 அடியில் இருந்து வந்தது. கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து 104 அடியில் இருந்து வந்தது. இந்நிலையில் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 103.95 அடியாக குறைந்தது. சுமார் 40 நாட்களுக்கு பிறகு பவானிசாகர் அணை 103 அடியாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அணைக்கு 409 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 500 கன அடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்காக தொடர்ந்து 2,300 கன அடியும், குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி என மொத்தம் 2,900 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News