செய்திகள்
ரிசர்வ் வங்கி

கடன் தவணைகள் ஒத்திவைப்பு காலத்தை நீட்டிக்க முடியாது -உச்ச நீதிமன்றத்தில் ரிசர்வ் வங்கி தகவல்

Published On 2020-10-10 06:54 GMT   |   Update On 2020-10-10 06:54 GMT
வங்கிக் கடன் தவணைகள் ஒத்திவைப்பு காலத்தை 6 மாதத்திற்கு மேல் நீட்டிப்பது சாத்தியமில்லை என்று ரிசர்வ் வங்கி சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி:

கொரோனா காலத்தில் வட்டிக்கு வட்டி விதிப்பதை எதிர்த்த வழக்கில் பிரமாண பத்திரத்தை ரிசர்வ் வங்கி  தாக்கல் செய்துள்ளது. காமத் குழுவின் பரிந்துரைகள் அடங்கிய தொகுக்கப்பட்ட இந்த பிரமாண பத்திரத்தில் வங்கிக் கடன் தவணைகள் ஒத்திவைப்பு காலத்தை 6 மாதத்திற்கு மேல் நீட்டிப்பது சாத்தியமில்லை என்று கூறி உள்ளது.

வங்கிக் கடன் தவணைகள் ஒத்திவைப்பு கால அவகாசத்தை மேலும் நீட்டிப்பது, கடனைத் திருப்பிச் செலுத்தும் ஒழுங்கை பாதிப்பதோடு, கடன் வழங்கும் முறையை பலவீனப்படுத்தி விடும், வாடிக்கையாளர்கள் மீதான சுமையை அதிகரிக்கச் செய்துவிடும், தள்ளிவைப்புக் காலம் முடிந்த பிறகு கடனை திருப்பிச் செலுத்தும் கடமையில் இருந்து வழுவச் செய்துவிடும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வட்டி மீதான வட்டி தள்ளுபடி என்ற மத்திய அரசின் திட்டம், பிரச்சினைகளை தீர்க்க தவறிவிட்டதாக சுப்ரீம் கோர்ட்  அதிருப்தி தெரிவித்திருந்தது. ரியல் எஸ்டேட் மற்றும் மின்துறையின் கவலைகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுமாறு கூறியதுடன், புதிதாக பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News