செய்திகள்
விபத்து

ஈரோடு அருகே ஆம்னி பஸ் மோதி 2 பேர் பலி

Published On 2019-10-30 05:34 GMT   |   Update On 2019-10-30 05:34 GMT
ஈரோடு அருகே இன்று அதிகாலை ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஈரோடு:

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஜலகண்டஹல்லியைச் சேர்ந்தவர் சிவா (வயது 23). இதேபோல் கிருஷ்ணகிரி ராயக்கோட்டையை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (18).

இவர்கள் 2 பேரும் ஒருவேனில் காய்கறி லோடு ஏற்றிக்கொண்டு திருப்பூருக்கு சென்று கொண்டிருந்தனர்.

வேனை சிவா ஓட்ட அருகில் ஸ்ரீகாந்த் அமர்ந்து கொண்டு சென்றார்.

இந்த வேன் ஈரோடு அருகே உள்ள சித்தோடு பகுதியில் வந்தபோது வேனின் ஒரு டயர் திடீரென வெடித்தது. இதனால் அவர்கள் வேனை கங்காபுரம்- ஆட்டையம்பாளையம் இடையே பைபாஸ் ரோட்டில் நிறுத்தி கீழே இறங்கி பார்த்துக் கொண்டிருந்தனர்.

அப்போது பெங்களூரில் இருந்து கேரளா மாநிலம் நோக்கி ஒரு தனியார் ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது.

இதில் எதிர்பாராத வகையில் அந்த ஆம்னி பஸ் ரோட்டோரம் நின்று கொண்டிருந்த சிவா மற்றும் ஸ்ரீகாந்த் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவரும் உடல் நசுங்கி பலியானார்கள்.

இது பற்றி தகவல் கிடைத்ததும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விபத்தில் பலியான இருவரின் உடல்களை மீட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்தில் ஆம்னி பஸ் டிரைவர் ராமகிருஷ்ணன் (32) படுகாயம் அடைந்தார். அவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்தில் பஸ்சில் வந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News