உள்ளூர் செய்திகள்
டெரக்கோட்டா கலைஞர் வரைந்த வண்ண கோலத்தை படத்தில் காணலாம்.

புதுவை: டெரக்கோட்டா கலைஞர் வரைந்த கண்கவர் கோலங்கள்

Published On 2022-01-15 05:30 GMT   |   Update On 2022-01-15 05:30 GMT
புதுவையில் டெரக்கோட்டா கலைஞர் வரைந்த கண்கவர் கோலங்கள் சமூக வலைதளங்களில் பரவி பாராட்டு பெற்று வருகிறது.
புதுச்சேரி:

புதுவை மூலக்குளம் பெரம்பை ரோட்டில வசிப்பவர் வெங்கடேச பெருமாள். டெரகோட்டா எனப்படும் சுடுமண் சிற்ப கலைஞர். இவர் தனது வீட்டின் முன்பு பொங்கல் பண்டிகையை 2 கோலம் வரைந்திருந்தார். 

அதில், அழிந்துவரும் பாரம்பரிய கலைகளான மயிலாட்டம், கரகாட்டம், தேவராட்டத்தை மிக தத்ரூபமா வண்ண கோலமாவால் நேர்த்தியாக கோலமிடப்பட்டிருந்தது. மற்றொன்றில் பொங்கலையொட்டி சூரிய பகவானை ஒரு குடும்பத்தினர் பொங்கலிட்டு வழிபடுவது போல மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது. 

இந்த கோலங்கள் அந்த வழியே சென்ற அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஒரு சிலர் கோலத்தை படம் எடுத்து முகநூலில் பதிவிட பலரும் அதை பகிர்ந்தனர். மேலும் சிலர் நேரில் சென்று கோலத்தை பார்வையிட்டு பதிவிட்டனர். வெங்கடேச பெருமாளையும் போனில் தொடர்புகொண்டு வாழ்த்தினர். 

இதுகுறித்து வெங்கடேச பெருமாளிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

சிறுவயது முதல் எனக்கு கோலம் என்றால் மிகவும் பிடிக்கும். அழகான கோலங்களை தத்ரூபமாக வெளிப்படுத்த வேண்டும் என விரும்புவேன். டெரகோட்டா சிலைகள் அமைக்கும்போது சிற்பங்கள் வடிப்பதால் அந்த கலை நயம் கோலத்திலும் வெளிப்படுகிறது. மார்கழி மாதம் முழுவதும் சிறிய அளவிலான, வித, விதமான கோலங்களை வரைந்தேன். 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் கோலங்களை வரைந்தேன். என் குடும்பத்தை சேர்ந்த சிறுமிகள் கோலத்துக்கு வண்ணமிட்டனர். காண்போரை கவர்ந்ததால் இந்த கோலங்கள் இப்போது வைரலாக பரவியுள்ளன. முகம்தெரியாத பலரும் தொடர்புகொண்டு வாழ்த்து வது கலைக்கு கிடைத்த பெருமையாக கருதுகிறேன். 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News