செய்திகள்
ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்க இருக்கிறது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 12 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு கடந்த 2018-ம் ஆண்டு மே 28-ந்தேதி சீல் வைத்தது.
இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையிட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. நிபுணர் குழு அறிக்கை அடிப்படையில் டிசம்பர் மாதம் ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அப்போது வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இதனைத் தெடர்ந்து வேதாந்தா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ந்தேதி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை 39 நாட்களாக நடைபெற்று வாதங்கள் முடிவடைந்தன.
இதனைத்தொடர்ந்து டி.எஸ். சிவஞானம், வி. பவானி நீதிபதிகள் கொண்ட அமர்வு நாளை தீர்ப்பு வழங்குகிறது.