செய்திகள்
தற்கொலை

துடியலூர் அருகே பாழடைந்த வீட்டில் வாலிபர் தற்கொலை

Published On 2021-06-10 12:55 GMT   |   Update On 2021-06-10 12:55 GMT
துடியலூர் அருகே காதலி காதலை ஏற்காததால் மனவேதனை அடைந்த வாலிபர் பாழடைந்த வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கவுண்டம்பாளையம்:

திருப்பூர் மடத்துக்குளத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 18). இவர் கோவை துடியலூரை அடுத்த சேரன் நகர் பகுதியில் அறை எடுத்து தங்கி அங்குள்ள தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் மணிகண்டன் திருப்பூரில் ஒரு பெண்ணை கடந்த 2 வருடங்களாக ஒரு தலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. அந்த பெண்ணிடம் மணிகண்டன் தனது காதலை தெரிவித்துள்ளார். ஆனால் அந்த பெண் அவரின் காதலை ஏற்க மறுத்தார். பின்னர் அவர் மீண்டும் சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணிடம் காதலை தெரிவித்துள்ளார். அப்போதும் அந்த பெண் மணிகண்டனின் காதலை ஏற்கவில்லை. இதனால் அவர் மனவேதனையுடன் இருந்து வந்தார்.

சம்பவத்தன்று விரக்தியடைந்த அவர் தான் தங்கி இருந்த அறையின் அருகே உள்ள பாழடைந்த வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News