செய்திகள்
கோப்பு படம்

மனைவி பிரிந்து சென்று விடுவாளோ என நினைத்து வியாபாரி தூக்கு போட்டு தற்கொலை

Published On 2020-01-14 09:17 GMT   |   Update On 2020-01-14 09:17 GMT
குரும்பாபேட்டில் தாயை போல மனைவி தன்னை விட்டு பிரிந்து சென்று விடுவாளோ என நினைத்து வியாபாரி தூக்குபோட்டு தற்கொலை செய்த கொண்டார்.
புதுச்சேரி:

புதுவை குரும்பாபேட் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜய பாஸ்கர் (வயது 34). இவர் முத்திரையர்பாளையம் சண்முகா தியேட்டர் அருகே போட்டோ பிரேம் கடை நடத்தி வந்தார்.

இவருக்கு கீதா (வயது 30) என்ற மனைவியும், 6 மாத ஆண் குழந்தை உள்ளது. கீதா அரசு கால்நடை கல்லூரியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

இதற்கிடையே விஜயபாஸ்கர் சிறுபிள்ளையாக இருந்த போது அவரது தந்தை இறந்து விட்டதாகவும், அவரது தாயார் வேறொருவரை 2-வது திருமணம் செய்து கொண்டதாகவும் இது பற்றி அடிக்கடி மனைவியிடம் கூறி விஜயபாஸ்கர் வருத்தப்பட்டு வந்தார்.

மேலும் தாயாரை போல் தன்னை விட்டு பிரிந்து சென்று விடுவாளோ என விஜயபாஸ்கர் தனது மனைவி கீதாவிடம் அடிக்கடி கேட்டு தகராறு செய்து வந்தார்.

அதுபோல் நேற்று முன்தினம் மதியமும் விஜயபாஸ்கர் இது போல் கேட்டு மனைவியிடம் தகராறு செய்தார். இதனால் கீதா கணவரிடம் கோபித்துக் கொண்டு குழந்தையுடன் பக்கத்து தெருவில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் குழந்தையை பார்க்க வராததால் சந்தேகம் அடைந்த கீதா நேற்று வீட்டுக்கு வந்து பார்த்தார்.

அப்போது வீட்டின் சிமெண்டு ஷீட்டில் இரும்பு பைப்பில் கணவர் துப்பட்டாவால் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News