விழுப்புரம் மாவட்டத்தில் வாகனங்களில் எரிசாராயம்- மதுப்பாட்டில் கடத்திய 4 வாலிபர்கள் கைது
விழுப்புரம்:
புதுவையில் இருந்து தமிழக பகுதிக்கு மதுப்பாட்டில்கள் கடத்துவதை தடுக்கும் பொருட்டு விழுப்புரம் மாவட்ட எல்லை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விழுப்புரம்,திண்டிவனம்,கோட்டக்குப்பம்,செஞ்சி ஆகிய பகுதிகளில் மதுவிலக்கு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள முருக்கேரி பகுதியில் இன்ஸ்பெக்டர் பாலசந்தர் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மினிலாரியை தடுத்து நிறுத்தி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த மினிலாரியை சோதனை செய்தனர்.
அதில் 60 கேன்களில் 2,100 லிட்டர் எரிசாராயம் இருப்பது கண்டுபிடிக்கபட்டது. இது குறித்து மினிலாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் விக்கிரவாண்டி சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த சதீஷ்(வயது21).என்பதும் இவர் புதுவையில் இருந்து எரிசாரயத்தை கடத்தி செல்வது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சதீசை கைது செய்தனர். மேலும் மினி லாரி மற்றும் எரிசாராயத்தை பறிமுதல் செய்து திண்டிவனம் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.