செய்திகள்
கோப்புபடம்

காதல் மனைவி கொலை: குடிப்பழக்கத்தை கண்டித்ததால் கொன்றேன் - சலூன் கடைக்காரர் வாக்குமூலம்

Published On 2021-04-08 08:42 GMT   |   Update On 2021-04-08 08:42 GMT
ஆலங்குளம் அருகே குடிப்பழக்கத்தை கண்டித்ததால் காதல் மனைவியை கொன்றதாக சலூன் கடைக்காரர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆலங்குளம்:

ஆலங்குளம் அண்ணா நகரை சேர்ந்தவர் ராஜ கோபால் (வயது28). இவர் பக்கத்து ஊரான முத்து கிருஷ்ணபேரியில் சலூன் கடை நடத்தி வருகிறார்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு முக்கூடல் பகுதியை சேர்ந்த தனது உறவினர் பெண்ணான மல்லிகா (22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

மல்லிகா ஆலங்குளத்தில் உள்ள கேபிள் டி.வி. ஆபரேட்டர் அலுவலகத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். ராஜகோபாலுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனை அவரது மனைவி கண்டித்துள்ளார்.

நேற்று மாலை ராஜகோபால் குடித்து விட்டு மல்லிகா வேலை பார்த்து கொண்டிருந்த அலுவலகத்திற்கு சென்று தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றவே அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் மல்லிகாவை சரமாரியாக குத்தினார்.

இதில் மல்லிகா ரத்த வெள்ளத்தில் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ள வீட்டில் வசித்து வந்த மாரியம்மாள் என்பவர் ஓடி வந்து ராஜகோபாலை தடுக்க முயன்றார்.

ஆனால் அவரையும் ராஜகோபால் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினார். இதனை அக்கம் பக்கத்தினர் பார்த்து ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையிலான போலீசார் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மல்லிகா, மாரியம்மாள் ஆகியோரை நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வழியிலேயே மல்லிகா பரிதாபமாக இறந்தார். மாரியம்மாளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ராஜ கோபாலை தேடி வந்தனர்.

இதற்கிடையே ஆலங்குளம்- துத்திகுளம் சாலையில் உள்ள சந்தனமாரியம்மன் கோவில் அருகே வாலிபர் ஒருவர் மதுபோதையில் விழுந்து கிடப்பதை அப்பகுதி மக்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு போலீசார் சென்று பார்த்த போது கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ராஜகோபால் என்பதும், மதுபோதையில் கொலை செய்து விட்டு தப்பி ஓடிய போது விழுந்து கிடந்ததும் தெரியவந்தது.

அவரை கைது செய்த போலீசார் போதை தெளிந்ததும் விசாரணை நடத்தினர். குடிப்பழக்கத்தை கைவிடுமாறு கூறி அடிக்கடி மல்லிகா கண்டித்து வந்ததால் ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொலை செய்தேன் என ராஜகோபால் போலீசில் வாக்குமூலம் அளித்தார்.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

Tags:    

Similar News