இந்தியா
மகாராஷ்டிரா அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஸ்டிரைக் 40வது நாளை எட்டியது
மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 250 பணிமனைகளில் இன்று 78 பணிமனைகளில் இருந்து மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டன.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தில் நஷ்டத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகத்தை மாநில அரசுடன் இணைக்க வலியுறுத்தி அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கடந்த அக்டோபர் மாதம் 28ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நவம்பர் 9ம் தேதி போராட்டம் தீவிரமடைந்தது. பெரும்பாலான டெப்போக்களிலும் பணிகள் நிறுத்தப்பட்டதால், பேருந்து சேவை முடங்கியது.
அரசின் கோரிக்கையை ஏற்று பணிக்கு சிலர் திரும்பினர். மற்றவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணிக்கு வராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. எனினும் போராட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.
அவ்வகையில், போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஸ்டிரைக் இன்று 40வது நாளாக நீடிக்கிறது. மொத்தம் உள்ள 250 பணிமனைகளில் 78 பணிமனைகளில் இருந்து மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களில் இதுவரை 9,625 நிரந்தர தொழிலாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுளள்னர். 1990 தினக்கூலி தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுளள்னர்.