செய்திகள்
சரத்பவார்

மகாவிகாஸ் கூட்டணி 5 ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்யும்: சரத்பவார் நம்பிக்கை

Published On 2021-06-28 06:17 GMT   |   Update On 2021-06-28 06:17 GMT
காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் என யாராக இருந்தாலும் அவர்கள் கட்சியை பலப்படுத்த உழைப்பார்கள். இதில் எந்த தவறான புரிதலும் இல்லை.
மும்பை :

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்த மகாவிகாஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்தநிலையில் முதல்-மந்திாி உத்தவ் தாக்கரே சமீபத்தில் டெல்லியில் பிரதமர் மோடியை தனியாக சந்தித்து பேசினார். இதேபோல காங்கிரஸ் மாநில தலைவர் நானா படோலே வரும் தேர்தலில் அவரது கட்சி தனித்து தேர்தலை சந்திக்கும் என கூறிவருகிறார். இதனால் மாநிலத்தை ஆளும் மகாவிகாஸ் கூட்டணி 5 ஆண்டுகள் நீடிக்குமா என்ற கேள்வி எழுந்து உள்ளது.

இந்தநிலையில் மகாவிகாஸ் கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர்
சரத்பவார்
, மாநிலத்தில் 3 கட்சிகளின் ஆட்சி 5 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

மகாவிகாஸ் கூட்டணி குறைந்தபட்ச செயல்திட்டத்துடன் நடக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. ஒரு அரசாங்கம் செயல்படும் போது, பிரச்சினைகளை சந்திக்க வேண்டியது இருக்கும். எனவே பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு தீர்வு காணவேண்டும் என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. பிரச்சினைகள் ஏற்பட்டால் அதுகுறித்து தீர்வு காண 3 கட்சிகளிலும் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காங்கிரசில் பாலாசாகேப் தோரட், அசோக் சவான், சிவசேனாவில் ஏக்நாத் ஷிண்டே, சுபாஷ் தேசாய் மற்றும் தேசியவாத காங்கிரசில் அஜித்பவார், ஜெயந்த்பாட்டீல் அந்த குழுவில் உள்ளனர். எனவே கொள்கை முடிவில் எதுவும் பிரச்சினை ஏற்பட்டால், இந்த தலைவர்கள் அதற்கு தீர்வு காண்பார்கள்.

மகாவிகாஸ் அகாடி அரசு சீராக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த அரசு 5 ஆண்டுகள் நீடிக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. 3 கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் உள்ளன. காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் என யாராக இருந்தாலும் அவர்கள் கட்சியை பலப்படுத்த உழைப்பார்கள். இதில் எந்த தவறான புரிதலும் இல்லை.
Tags:    

Similar News