செய்திகள்
விஜயநாதன்.

திருமங்கலம் அருகே கூலித்தொழிலாளி அடித்து கொலை- கிராம மக்கள் போராட்டம்

Published On 2020-11-19 11:14 GMT   |   Update On 2020-11-19 11:14 GMT
திருமங்கலம் அருகே தகராறை விலக்க சென்ற கூலி தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருமங்கலம்:

திருமங்கலம் அருகே உள்ள காண்டை கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் மகன் முத்துப்பாண்டி. இவர் கடந்த 14-ந்தேதி தீபாவளியையொட்டி பட்டாசு வாங்குவதற்காக வடக்கம்பட்டி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த அஜய், மாதேஷ், அழகர், தினேஷ் குமார் உள்ளிட்ட 5 பேர் நடுரோட்டில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அவர்களை ஓரமாக நின்று பேசுமாறு முத்துப்பாண்டி கூறியுள்ளார். இதில் அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் முத்துப்பாண்டி தாக்கப்பட்டார். அப்போது முத்துப்பாண்டியின் பெரியப்பா விஜயநாதன் (வயது 52) தகராறை விலக்க சென்றார். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் 5 பேரும் சேர்ந்து விஜயநாதனை கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த விஜயநாதன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இந்த சம்பவம் நடைபெற்று 5 நாட்கள் ஆகியும் குற்றவாளிகளை கைது செய்யவில்லை எனக்கோரி விஜயநாதன் தரப்பினர் திருமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது இன்ஸ்பெக்டர் சிவசக்தி அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என கூறி அனுப்பி வைத்தார்.

இதனிடையே மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த விஜயநாதன் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் ஆவேசம் அடைந்த காண்டை கிராம பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் காண்டை விலக்கு பகுதியில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விஜயநாதனை அடித்துக் கொலை செய்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.

அவர்களுடன் திருமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு வினோதினி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News