செய்திகள்
கோவில்பட்டி அருகே விபத்தில் காயம் அடைந்த வாலிபர் பலி
கோவில்பட்டி அருகே விபத்தில் காயம் அடைந்த வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் 1-வது தெருவைச் சேர்ந்த முத்துப்பாண்டி மகன் கார்த்திக் (வயது 28). இவர் தனது உறவினர் சுதாலட்சுமி (37), அவரது மகன் சுந்தரபாண்டி (10) ஆகியோருடன் நேற்று முன்தினம் கயத்தாறுக்கு சென்றுவிட்டு கோவில்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
கோவில்பட்டி லட்சுமி மில் மேம்பாலத்தில் வந்தபோது, மோட்டார் சைக்கிள் திடீரென நிலைதடுமாறி தடுப்புச்சுவரில் மோதியது. இதில், 3 பேரும் காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கோவில்பட்டி மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று 3 பேரையும் மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். இதில், முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் கார்த்திக் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் கார்த்திக் பரிதாபமாக இறந்தார். இவருக்கு இன்னும் 10 நாட்களில் திருமணம் நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.