செய்திகள்
கோப்புப்படம்

ஓடும் காரில் இளம்பெண்ணிடம் 3 வாலிபர்கள் பாலியல் அத்துமீறல்

Published On 2021-11-24 09:06 GMT   |   Update On 2021-11-24 09:06 GMT
சென்னை நுங்கம்பாக்கத்தில் நள்ளிரவில் ஓடும் காரில் இளம்பெண்ணிடம் 3 வாலிபர்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சென்னை:

சென்னை நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையில் அமைந்துள்ள இலங்கை தூதரகம் அருகே நேற்று நள்ளிரவில் 3 மணி அளவில் கார் ஒன்று வேகமாக சென்றது.

அந்த காரில் இருந்து பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் காரை மடக்கினார்.

அப்போது 29 வயதான பட்டதாரி இளம்பெண் காரில் இருந்த 3 வாலிபர்களிடம் தகராறு செய்த படி செருப்பால் அடித்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸ்காரர் பெண்ணிடம் என்ன நடந்தது என்று விசாரித்தார்.

விசாரணையில் 3 வாலிபர்கள் சென்னை அண்ணாசாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் மது விருந்தை முடித்து விட்டு வந்தது தெரிய வந்தது. அவர்களுடன் வந்த பெண்ணும் மது விருந்தில் பங்கேற்றுள்ளார்.

4 பேரும் ஒன்றாக காரில் வீடு திரும்பி உள்ளனர். அப்போதுதான் 3 வாலிபர்களும் இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாகவே இளம்பெண் கூச்சல் போட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 3 வாலிபர்களையும் விசாரணைக்காக அழைத்து சென்றனர். பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான இளம்பெண்ணும் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரிடமும் 3 வாலிபர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களது பின்னணி பற்றி தெரிய வந்தது.

வாலிபர்கள் 3 பேரும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். துரைப்பாக்கத்தில் தங்கியிருந்து ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வந்துள்ளனர்.

இளம்பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் வேளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் அவரும் நட்சத்திர ஓட்டலில் மது விருந்தில் பங்கேற்றதும் தெரியவந்தது.

இந்த சம்பவம் நேற்று நள்ளிரவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் மகளிர் போலீசார் இது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயிரம்விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து 3 பேர் மீதும் கைது நடவடிக்கை பாய்கிறது.

இது தொடர்பாக போலீசார் கூறும்போது, நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். விசாரணையின் முடிவில் சம்பந்தப்பட்ட வாலிபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்கள்.

நேற்று நள்ளிரவில் நடைபெற்ற சம்பவம் என்பதால் இன்று மதியம் வரை போலீஸ் விசாரணை நீடித்தது. இன்று மாலையில் பாலியல் சம்பவம் தொடர்பாக போலீசார் விரிவான விளக்கங்களை வெளியிட உள்ளனர்.

இலங்கை தூதரகம் அருகில் வைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான இளம்பெண்ணையும், 3 வாலிபர்களையும் கீழே இறங்கி போலீசார் விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது காரை ஓட்டி வந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். அவர் யார் என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News