உலகம்
இறந்தவர்களின் உடல்கள்

அபுதாபி தாக்குதலில் உயிரிழந்த 2 இந்தியர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

Published On 2022-01-21 09:31 GMT   |   Update On 2022-01-21 09:31 GMT
அபுதாபி விமான நிலையத்தில் நடைபெற்ற தாக்குதலில் 2 இந்தியர்கள் உள்பட 6 பேர் காயமடைந்தனர்.
சண்டிகர்:

ஏமன் நாட்டில் அதிபர் மன்சூர் ஹாதி தலைமையிலான அரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இதில் அரசு படைகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் ஆதரவு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 17-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபி விமான நிலையம், அபுதாபியின் முஷாபா நகரில் உள்ள அண்டொக் எண்ணெய் நிறுவனத்தை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள்  டிரோன் தாக்குதல் நடத்தினர். 

இதில், எண்ணெய் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 2 இந்தியர்கள், 1 பாகிஸ்தானியர் என 3 பேர் உயிரிழந்தனர். விமான நிலையத்தில் நடைபெற்ற தாக்குதலில் 2 இந்தியர்கள் உள்பட 6 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது.

இந்நிலையில், அபுதாபி தாக்குதலில் உயிரிழந்த 2 இந்தியர்களின் உடல்கள் இன்று இந்தியா கொண்டுவரப்பட்டு, சொந்த மாநிலமான பஞ்சாப்பில் உள்ள அவர்களுடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

இரண்டு பேரின் உடல்களும் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளது. 

Tags:    

Similar News