செய்திகள்
கொலை

திருக்கழுக்குன்றத்தில் பெண் கற்பழித்து கொலை- 15 வயது சிறுவன் கைது

Published On 2021-10-16 05:16 GMT   |   Update On 2021-10-16 05:16 GMT
திருக்கழுக்குன்றத்தில் பெண் கற்பழித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான்.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த கொத்திமங்கலம் அருகே உள்ள வடக்குபட்டு பகுதியில் வசிப்பவர் ராமு. இருளர் இன சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி ஜோதி (வயது50).

இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் குடிசையில் வசித்து வருகிறார்கள்.

நேற்று இரவு கணவன்- மனைவி மற்றும் குழந்தைகள் வீட்டில் தூங்கினார்கள். இவர்களது வீட்டின் அருகில் சிறிய மலைபோன்ற குன்று பகுதி உள்ளது. இன்று அதிகாலை 4 மணியளவில் அந்த குன்று பகுதியில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டது.

இதையடுத்து ராமுவின் மூத்த மகன் எழுந்து கதவை திறந்து நாய் குரைக்கும் இடத்துக்கு சென்று பார்த்தார். அப்போது குன்று பகுதியில் ஜோதி அரைகுறை ஆடைகளுடன் கிடந்தார். அவரது அருகே 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் இருந்தான்.

ஜோதியின் மகனை பார்த்ததும் அந்த சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடினான். இதையடுத்து ஜோதியின் மகன் கூச்சலிட்டான். இதனால் அக்கம் பக்கம் வசித்தவர்கள் அங்கு ஓடி வந்தனர்.

ஜோதியை பார்த்தபோது அவருக்கு சுய நினைவு இல்லை. அவர் இறந்த நிலையில் காணப்பட்டார்.

இதுகுறித்து உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு விஜய குமார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

பின்னர் ஜோதியின் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ஜோதி கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். ஜோதி இறந்து கிடந்தபோது அவரது அருகில் இருந்த சிறுவன் ஜோதி வீட்டின் அருகே வசித்தவன் என்று தெரியவந்தது.

இதையடுத்து அவனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவனை செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News