செய்திகள்
ஹபீஸ் சயீத்

ஹபீஸ் சயீத்துக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை: பாகிஸ்தான் நீதிமன்றம்

Published On 2020-11-19 11:02 GMT   |   Update On 2020-11-19 11:02 GMT
ஜமாத்-உத்-தவா தலைவர் ஹபீஸ் சயீத்துக்கு பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு கோர்ட் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ஜமாத்-உத்-தவா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத். இவர் மீது பயங்கரவாத செயல்களை அரங்கேற்றுவதற்கு நிதி திரட்டியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து பாகிஸ்தான் பயங்கரவாத தடுப்பு கோர்ட் விசாரணை நடத்தியது. விசாரணை முடிவில் இன்று ஹபீஸ் சயீத்துக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் கடல் மார்க்கமாக புகுந்து துப்பாக்கிகளால் சுட்டும், குண்டுகளை வெடித்தும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நடத்தினர். உலகையே அதிர வைத்த இந்த தாக்குதல்களில் 166 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர், பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் சயீத் ஆவார். மும்பை தாக்குதலைத் தொடர்ந்து அவரை சர்வதேச பயங்கரவாதி என அமெரிக்கா அறிவித்தது.

மேலும், நீதியின் முன் நிறுத்துவதற்கு அவரைப்பற்றிய தகவல்களை அளிப்போருக்கு 10 மில்லியன் பவுண்ட் (சுமார் ரூ.70 கோடி) பரிசு அளிக்கப்படும் எனவும் கூறியது. இருப்பினும் அவரை கைது செய்ய பாகிஸ்தான் மறுத்து வந்தது.

இந்த நிலையில், சர்வதேச அளவில் தொடர்ந்து நிர்ப்பந்தங்கள் வந்ததைத் தொடர்ந்து ஹபீஸ் சயீத் மற்றும் அவரது லஷ்கர் இ தொய்பா, ஜமாத் உத் தவா, பலாஹ் இ இன்சானியத் அறக்கட்டளை ஆகியவற்றின் மீது பயங்கரவாத தடுப்பு படையினர் விசாரணையை முடுக்கி விட்டனர்.

அதைத் தொடர்ந்து பஞ்சாப் மாகாணத்தின் பல இடங்களிலும் ஹபீஸ் சயீத் மற்றும் அவரது கூட்டாளிகள் 12 பேர் மீது மொத்தம் 23 வழக்குகளை கடந்த ஜூலை 3-ந் தேதி பயங்கரவாத தடுப்பு படையினர் பதிவு செய்தனர். பயங்கரவாத செயல்களை அரங்கேற்றுவதற்கு அவர்கள் நிதி திரட்டினர் என்பதுதான் குற்றச்சாட்டு.

இந்த நிலையில், ஹபீஸ் சயீத் ஜூலை 17-ந்தேதி லாகூரில் இருந்து குஜ்ரன்வாலா நகருக்கு சென்று கொண்டிருந்தார். அவரை வழியில் இடைமறித்து பயங்கரவாத தடுப்பு படையினர் அதிரடியாக கைது செய்தனர்.
Tags:    

Similar News