ஆன்மிகம்
வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல்

சொர்க்கவாசலில் நுழைந்தால் சிக்கல்கள் தீரும்

Published On 2020-01-04 08:58 GMT   |   Update On 2020-01-04 08:58 GMT
ரொக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம், சொர்க்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விழாவையும் கொண்டாட வேண்டுமல்லவா? அந்த விழா இந்த மார்கழி மாதத்தில்தான் வருகிறது.
“மாதங்களில் நான் மார்கழி” என்று கீதையில் கண்ணன் சொல்லியிருக்கிறார். புனிதமான மாதமாகவும், தேவர்கள் துயில் எழும் மாதமாகவும் கருதப்படும் மார்கழி மாதத்தில் நாம் விஷ்ணுவை வணங்கினால், நம்முடைய விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

‘வைகுண்ட ஏகாதசி’ வரும் தினத்தில் சொர்க்க வாசலைத் திறந்து வைப்பார்கள். ஆண்டு முழுவதும் அடைத்து வைத்திருக்கும் கதவு, அன்று மட்டும் திறந்து வைக்கப்படும். அந்தச் சொர்க்கவாசலின் வழியாக நாம் நுழைந்து வந்தால், நம் வாழ்வில் உண்டாகும் சிக்கல்கள் தீரும். செல்வ வளம் சேரும் என்பது நம்பிக்கை.

பாற்கடலில் துயிலும் பரந்தாமனுக்குப் பல விழாக்கள் இருந்தாலும், வைகுண்ட ஏகாதசி பக்தர்களின் மனதில் இடம் பெற்ற பக்தி திருவிழாவாகும். இந்த ஏகாதசியன்று ‘சொர்க்க வாசலில் நுழைதல்’ என்ற விழா விஷ்ணு ஆலயங்கள் தோறும் நடைபெறும்.

ரொக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாம், சொர்க்கத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விழாவையும் கொண்டாட வேண்டுமல்லவா? அந்த விழா இந்த மார்கழி மாதத்தில்தான் வருகிறது.

வைகுண்ட ஏகாதசி அன்று, திருவரங்கம் அரங்கநாதர் ஆலயத்தின் சொர்க்கவாசலில் நுழைய லட்சக்கணக்கான மக்கள் காத்திருப்பர். அதுபோன்று திருக்கோஷ்டியூர், திருமோகூர், அரியக்குடி, திருமயம், உப்பிலியப்பன் கோவில், திருப்பதி போன்ற சகல விஷ்ணு ஆலயங்களிலும் ஏகாதசி விழா உற்சவம் சீரும் சிறப்புமாக நடைபெறுவதைக் காணலாம். சொர்க்கவாசல் நுழைவு விழாவை, நாம் கண்ணாரக் கண்டாலே, பொன்னும் பொருளும், போற்றுகிற செல்வாக்கும் நம்மை வந்தடையும்.

பதினாறு பேறுகளுக்கும் சொந்தக்காரரான விஷ்ணுவை, நாம் ‘பெருமாள்’ என்று அழைக்கிறோம். அவருக்காகக் கட்டிய கோவிலை ‘பெருமாள் கோவில்’ என்று சொல்கிறோம். அவரை வழிபட்டால் நமக்குப் பதினாறு விதமான பேறுகளும் வந்து சேரும் என்பதை நாம் அனுபவத்தில் கண்டுகொள்ள முடியும்.

‘காக்கும் கடவுள்’ என்று வர்ணிக்கப்படும் விஷ்ணுவிற்கு பதினாறு திருநாமங்கள் சொல்வார்கள். அவை:- 1.ஸ்ரீவிஷ்ணு, 2.நாராயணன், 3.கோவிந்தன், 4.மதுசூதனன், 5.ஜனார்த்தனன், 6.பத்மநாபன், 7.ப்ரஜாதிபதி, 8.வராகன், 9.சக்ரதாரி, 10.வாமணன், 11.மாதவன், 12.நரசிம்மன், 13.திரிவிக்ரமன், 14.ரகுநந்தனன், 15.ஜலசாயினன், 16.ஸ்ரீதரன் ஆகியவையாகும்.

இங்ஙனம் பதினாறு பேர்களுக்கும் சொந்தக்காரராக இருந்து, நமக்கு 16 பேறுகளையும் வழங்கும் விஷ்ணுவை, மார்கழி மாதம் 21-ந் தேதி (6.1.2020) திங்கட்கிழமை வரும் வைகுண்ட ஏகாதசி திருநாளில் வணங்கினால், கேட்ட வரம் கிடைக்கும். நினைத்தபடி நலமான, வளமான வாழ்வு அமையும்.

மார்கழி மாதம் கிருஷ்ண பட்சத்தில் (தேய்பிறை) வரும் ஏகாதசிக்கு ‘உற்பத்தி ஏகாதசி’ என்று பெயர். அதே மாதம் சுக்ல பட்சத்தில் (வளர்பிறை) வரும் ஏகாதசிக்கு ‘வைகுண்ட ஏகாதசி’ என்று பெயர்.

ஏகாதசியன்று அவல், வெல்லம் கலந்து இறைவனுக்கு நைவேத்தியமாக படைத்து சாப்பிடலாம். அன்றைய தினம் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள், மதியம், இரவு வேளையில் பலகாரம் மட்டும் சாப்பிடுவர். அன்று இரவு முழுவதும் கண்விழித்திருக்கும் பொழுது, இறை நாமத்தையே உச்சரிக்க வேண்டும். பக்திப் பாடல்கள் பாடி வழிபடலாம். மறுநாள் அதி காலையில் சூரியன் உதிக்கும் முன்னால் நீராடி, பச்சரி சோறு, அகத்திக் கீரை, நெல்லிக்காய், கருணைக் கிழங்கு போட்டு செய்யப்பட்ட புளிக்குழம்பு சாப்பிடுவது நல்லது.

வைகுண்ட ஏகாதசி வரும் மாதமான மார்கழியே ஒரு சிறப்புக்குரிய மாதம்தான். இந்த மாதத்தில் பெண்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டின் முன் பக்கத்தில் கோலமிட்டு, அதன் மத்தியில் பரங்கிப் பூவை வைத்து அழகுபடுத்துவார்கள். மஞ்சள் வண்ணப் பரங்கிப் பூ மங்கலத்தை வரவழைக்கும். கிருமி நாசினியான சாணத்தின் மீது அதை வைத்து அழகு பார்ப்பர்.

இந்த வழிபாட்டினால் மனமும், உடலும் சீராகிறது. பிரம்ம முகூர்த்தத்தில் எழும்போது, ‘ஓசோன்’ என்னும் காற்று மண்டலத்தில் உள்ள காற்று நம் மீது படுவதால் ஆரோக்கியம் மேம்படுகிறது. ஆண்டாள் நாச்சியார், திருப்பாவை பாடி விஷ்ணுவை வழிபட்டார். அதன்மூலம் சூடிக் கொடுத்த சுடர்கொடியாக மாறினார்.

இப்படி சிறப்பு வாய்ந்த மார்கழி மாதத்தில் ஏகாதசி விரதத்தை இனிதே கடைப்பிடித்து, பாற்கடலில் துயிலும் பரந்தாமனை வழிபட்டால் வாழ்க்கையில் வளம் வந்து சேரும். வருங்காலம் நலமாக அமையும். பரந்தாமனுக்கு அவல் நைவேத்தியம் படைப்பதன் மூலம் நம்முடைய ஆவல்கள் அனைத்தும் பூர்த்தியாகும்.

விஷ்ணுவை வழிபடுவதோடு, அவரது துணையாக விளங்கி, செல்வத்தை நமக்களிக்கும் லட்சுமியையும் வழிபட்டு லட்சுமி வருகைப் பதிகம் பாடினால், குறையாத செல்வம் கிடைக்கும். அஷ்டலட்சுமிகளின் படத்தையும், விஷ்ணு படத்தோடு பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்வது நல்லது. இதனால் நவக்கோள்களும் உங்களுக்கு நன்மை செய்யத் தொடங்கும்.

“ஜோதிடக்கலைமணி” சிவல்புரி சிங்காரம்
Tags:    

Similar News