செய்திகள்
சிங்கம்புணரி பகுதியில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
சிங்கம்புணரி:
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் தூய்மை பணியாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் பகுதியில் அமைக்கப்பட்ட தற்காலிக வாரச்சந்தை பகுதியில் தாசில்தார் திருநாவுக்கரசு, பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் நபிஷாபானு மற்றும் செயல் அலுவலர் ஜான்முகமது ஆகியோர் தலைமையிலான குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வாரச்சந்தையில் முககவசம் அணியாமல் வியாபாரம் செய்த வியாபாரிகள், முககவசம் அணியாமல் பொருட்கள் வாங்க வந்தவர்கள் மற்றும் வாகனங்களில் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு அவர்களுக்கு கொரோனா நோய் தடுப்பு குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும் ஒரே நாளில் அபராத தொகையாக ரூ.6ஆயிரம் வசூலிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது பிரான்மலை அரசு வட்டார மருத்துவர் செந்தில்குமார், சிங்கம்புணரி பேரூராட்சி தூய்மைப்பணி மேற்பார்வையாளர்கள் ரவிச்சந்திரன், தென்னரசு, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள் தினகரன், மதியரசன், எழில்மாறன், ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள் மங்கையர்கரசி மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்துகொண்டனர்.