செய்திகள்
வெளிநாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் கொள்ளை
கடையநல்லூர் அருகே வெளிநாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் நடைபெற்ற கொள்ளை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
கடையநல்லூர் மெயின் பஜாரில் முஹம்மது முஸம்மில் என்பவர் வெளிநாட்டுப் பொருட்களை விற்பனை செய்யும் சூப்பர் மார்க்கெட் கடை வைத்துள்ளார்.
நேற்று இரவு 9 மணிக்கு வியாபாரத்தை முடித்து விட்டு தனது கடையை அடைத்துவிட்டு முஸம்மில் சென்றுவிட்டார். அதன்பின்னர் அதிகாலை 5 மணிக்கு அந்த வழியாக அருகில் உள்ள பள்ளி வாசலுக்கு தொழுகைக்காக வந்த பொழுது தனது கடையின் பூட்டு மற்றும் ஷட்டர் கடப்பாரையால் உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.4 ஆயிரம் பணம் மற்றும் ஏராளமான வெளிநாட்டுப் பொருள்கள் திருடப்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து முஸம்மில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். புளியங்குடி டி.எஸ்.பி.ராமகிருஷ்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர்.
சம்பவம் நடந்த கடைக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும் சந்தேகப்படும் நபர்களின் கைரேகைகளை ஒப்பிட்டுப் பார்த்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.