செய்திகள்
கோவில்கள்,தனியார் இடங்களில் 1500 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை-போலீசார் தீவிர கண்காணிப்பு
அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர்:
விநாயகர் சிலைகளை பொதுஇடங்களில் வைக்கவும், விசர்ஜன ஊர்வலத்துக்கும் அரசு அனுமதி மறுத்துள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் கலெக்டர் வினீத், விநாயகர் சிலைகளை கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி வைக்க கூடாது மற்றும் ஊர்வலமாக சென்று நீர் நிலைகளில் கரைக்க கூடாது. இதை மீறி செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உத்தரவிட்டார்.
ஆனால் இந்து அமைப்புகள் தடையை மீறி மாவட்டத்தில் சிலைகள் வைக்கப்படும், ஊர்வலங்கள் நடத்தப்படும் என கூறிவந்தனர். இதனால் அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து போலீசார் ரோந்து பணியில் ஈடுட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.இதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் தலைமையில் 850 போலீசாரும், மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா தலைமையில் 2 துணை கமிஷனர்கள், 7 உதவி கமிஷனர்கள், 12 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட் ட 800 போலீசார் மாநகர பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோவில்களில் கூட்டங்கள் எவ்வாறு உள்ளது, பொதுஇடங்களில் பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுகின்றனரா? தடையை மீறி விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதா? என ரோந்து வாகனங்களில் சென்று போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
தொடர்ந்து பொதுமக்கள் வீடுகளில் வழிபடும் விநாயகர் சிலைகளை போலீசார் மற்றும் இந்து அறநிலையத்துறையினர் தான் கரைக்க எடுத்து செல்வார்கள், அதற்காக போலீஸ் நிலையங்கள் வாரியாக வாகனங்கள் ஏற்பாடுகள் செய்துள்ளனர். மாவட்டத்தில் இந்து அமைப்புகள் நிர்வாகிகள் வீடுகள் முன்பு, தனியார் இடங்கள் மற்றும் கோவில்களில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட சிலைகள் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர். அந்த இடங்களிலும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.