செய்திகள்
வேட்பாளரின் வாக்கை அவரது கணவரே பதிவு செய்ததாக குற்றச்சாட்டு
தேர்தலுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக தி.மு.க .வேட்பாளர் கிருஷ்ணவேணி என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற உள்ளாட்சி இடைத்தேர்தலில், தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளரின் வாக்கை அவரின் கணவரே பதிவு செய்ததாக பா.ஜ.க சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டரிடமும் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், தமிழகத்தில் இரண்டாம் கட்ட உள்ளாட்சி தேர்தலானது கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்ட ஊராட்சியின் 10 வது வார்டுக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.
காங்கேயம் ஒன்றியத்தில் 10 ஊராட்சியும், வெள்ளகோவில் ஒன்றியத்தில் 4 ஊராட்சியை சேர்ந்த மக்களும் இதில் வாக்களித்துள்ளனர். இதில் தி.மு.க. சார்பில் கிருஷ்ணவேணி என்பவரும் , அ.தி.மு.க. சார்பில் லட்சுமி சோமசுந்தரம் என்பவரும், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 7 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
தேர்தலுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக தி.மு.க .வேட்பாளர் கிருஷ்ணவேணி என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனால் தேர்தல் தினத்தன்று, அவரின் வாக்கை கிருஷ்ணவேணியின் கணவரே பாப்பினியில் உள்ள வரதப்பம்பாளையம் வாக்குச்சாவடியில் வாக்கினை செலுத்தியுள்ளார்.
இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும். வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.