ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் ‘திடீர்’ மரணம்
நாகர்கோவில்:
ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் செல்வம் (வயது 49). இவர் கடந்த உள்ளாட்சி தேர்தல் பணியில் இருந்த போது திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து முதல் உதவி சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் இன்ஸ்பெக்டர் செல்வம் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஆஸ்பத்திரியில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து செல்வம் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் அவருக்கு திடீரென மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட செல்வம் இன்று பரிதாபமாக இறந்து விட்டார். இன்ஸ்பெக்டர் செல்வம் விருதுநகர் மாவட்டம் கள்ளிக்குடி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட நொச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர். இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பணிமாறுதல் பெற்று சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்தார். பின்னர் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் பணியாற்றினார். கடந்த 4 ஆண்டுகளாக குமரி மாவட்டத்தில் இவர் பணியாற்றி உள்ளார்.
களியக்காவிளை சோதனைச்சாவடியில் பணியில் இருந்த சப்-இன்ஸ் பெக்டர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் தற்போது இன்ஸ்பெக்டர் செல்வமும் பலியான சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.