செய்திகள்
ஆடு மேய்க்கும் தொழிலாளியை காலில் விழ வைத்த சம்பவம்

ஆடு மேய்க்கும் தொழிலாளியை காலில் விழ வைத்த 7 பேர் கைது

Published On 2020-10-14 02:19 GMT   |   Update On 2020-10-14 02:19 GMT
கயத்தாறு அருகே ஆடு மேய்க்கும் தொழிலாளியை காலில் விழ வைத்த சிவசங்கு, சங்கிலிபாண்டி, கார்த்திக் உள்பட 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பாதிக்கப்பட்ட பால்ராஜ் மற்றும் குடும்பத்தினரிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
கயத்தாறு :

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ஓலைக்குளம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ்(வயது55). தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவரான இவர் ஆடு மேய்க்கும் தொழிலாளி ஆவார். அதே பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கு(60). இவர்கள் 2 பேரும் இடையே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமங்களக்குறிச்சியில் பால்ராஜ் ஆடுகளை மேய்த்துக் கொண்டு இருந்தார்.

அப்போது, அங்கு சிவசங்கு, அவரது மகன் சங்கிலிபாண்டி(19), உறவினர்களான கார்த்திக்(23), பெரியமாரி(47), வீரைய்யா(42), மகேந்திர(20), மகாராஜன்(24) ஆகியோரும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து வந்தனர். அப்போது, ஆடு மேய்க்கும் தகராறில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சிவசங்கு தரப்பினர் பால்ராஜை காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்து, மிரட்டி உள்ளனர். இதை அங்கு இருந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பரவச்செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து பால்ராஜ் கொடுத்த புகாரின்பேரில் கயத்தாறு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் இந்த வழக்கு தொடர்பாக சிவசங்கு, சங்கிலிபாண்டி, கார்த்திக் உள்பட 7 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேற்று ஓலைக்குளத்திற்கு வந்தார். பாதிக்கப்பட்ட பால்ராஜ் மற்றும் குடும்பத்தினரிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
Tags:    

Similar News