வேதாரண்யம் அருகே முன்விரோத தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து- 3 பேர் மீது வழக்கு
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த ஆதனூர் கிராமம் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 40). இவர் வீட்டு வாசல் வழியே உப்பளத்திற்கு மணல் மற்றும் பொருட்களை ஏற்றிக்கொண்டு அடிக்கடி ஒரு டிராக்டர் சென்று வந்ததாம். இதனால் பல தொல்லைகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதை தட்டி கேட்டதால் முன்விரோதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த அதே ஊரை சேர்ந்த வீரமணி, ஐயப்பன் அண்டர்காடு சேர்ந்த முத்துக்குமரன் ஆகிய மூவரும் சுரேஷ்குமாரை ஆதனூர் தூண்டிக்காரன் கோவில் அருகே மினி டிராக்டரில் சென்றபோது வழிமறித்து கத்தியால் குத்தி, சுத்தியலால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சுரேஷ்குமார் வேதாரண்யம் அரசு மருத்துவமனையிலும், தீவிர சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
புகாரின் பேரில் வேதாரண்யம் சப்-இன்ஸ் பெக்டர் பத்மசேகர் வழக்கு பதிவு செய்து அதில் முத்துக்குமரனை (37) கைது செய்து விசாரித்து வருகிறார்.தலைமறைவான இருவரை தேடி வருகின்றார்.