செய்திகள்
திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட் பகுதியில் 2-வது நாளாக நடைபாதை கடைகள் அகற்றம்
மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் உத்தரவின்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தி சுமார் 50-க்கும் மேற்பட்ட சாலையோரக் கடைகளை அப்புறப்படுத்தினர்.
திருப்பூர்:
திருப்பூர் தென்னம்பாளையம் உழவர் சந்தையில் 120 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வியாபாரம் செய்ய பதிவு செய்துள்ளனர். உழவர் சந்தைக்கு வெளியே சாலையோரக் கடைகள் அமைத்து சிலர் காய்கறிகள் விற்பனை செய்வதால் உழவர் சந்தையில் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
எனவே சாலையோரக் கடைகளை உடனடியாக அப்புறப்படுத்தக்கோரி மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் உழவர் சந்தை விவசாயிகள் கோரிக்கை மனு அளித்திருந்தனர். இதையடுத்து மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார் உத்தரவின்பேரில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தி சுமார் 50-க்கும் மேற்பட்ட சாலையோரக் கடைகளை அப்புறப்படுத்தினர்.
இனிமேல் உழவர் சந்தையின் வெளிப்புறத்தில் சாலையோரக் கடைகளை அமைக்கக் கூடாது, மீறினால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என ஒலிபெருக்கி மூலம் மாநகராட்சி அதிகாரிகள் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று 2வது நாளாக மாநகராட்சி அதிகாரிகள் பல்லடம் ரோடு தென்னம்பாளையம் மார்க்கெட் பகுதி உழவர் சந்தை பகுதிகளில் ஆய்வு செய்தனர். அப்போது அங்கு நடைபாதைகளில் கடைகள் அமைத்து இருந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
இரண்டாவது நாளாக திருப்பூர் தென்னம்பாளையம் சந்தை அருகே நடைபாதையில் வைத்திருந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.