செய்திகள்
எந்திர பழுது காரணமாக வாக்குப்பதிவு தாமதம்

நெல்லை, தூத்துக்குடியில் எந்திர பழுது காரணமாக வாக்குப்பதிவு தாமதம்

Published On 2021-04-06 06:39 GMT   |   Update On 2021-04-06 06:39 GMT
வாக்குச்சாவடியில் 1203 பெண் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ள நிலையில் எந்திரம் பழுதானதால் அவர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். பின்னர் சிறிது நேரத்திலேயே எந்திரம் பழுது சரிசெய்யப்பட்டதால் மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற தொடங்கியது.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் தேர்தலையொட்டி இன்று காலை முதலே விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒரு சில இடங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்களில் பழுது ஏற்பட்டதால் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர்.

பாளை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் ஒரு அறையில் வாக்குப்பதிவு எந்திரம் காலையில் பழுதானது.

அந்த வாக்குச்சாவடியில் 1203 பெண் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ள நிலையில் எந்திரம் பழுதானதால் அவர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றனர். பின்னர் சிறிது நேரத்திலேயே எந்திரம் பழுது சரிசெய்யப்பட்டதால் மீண்டும் வாக்குப்பதிவு நடைபெற தொடங்கியது.

இதேபோல் நெல்லை டவுண் வழுக்கு ஓடை பகுதியில் மழலையர் தொடக்கப்பள்ளியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஓட்டு எந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதனால் வாக்காளர்கள் காத்து நின்றனர்.

அவர்களுக்கு மாலை நேரத்தில் கூடுதலாக வாக்கினை பதிவு செய்ய நேரம் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

திசையன்விளை உலக ரட்சகர் மேல்நிலைப்பள்ளியில் 216-ம் நம்பர் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திர கோளாறு காரணமாக காலை 7 மணிக்கு தொடங்க வேண்டிய வாக்குப்பதிவு சுமார் 1¾ மணி நேரம் தாமதமாக காலை 8.45 மணிக்கு தொடங்கியது.

உடன்குடி கிறிஸ்தியாநகரம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் ஓட்டுப்பதிவு எந்திரம் பழுதடைந்தது. அந்த வாக்குச்சாவடி வைத்திலிங்கபுரம் ஆண்களுக்கான வாக்குச்சாவடி ஆகும். இதனால் ஓட்டுப்போட வந்த ஆண்கள் வெளியில் கூட்டமாக நின்றனர். சுமார் 1¼ மணி நேரம் தாமதத்திற்கு பின் புதிய வாக்கு எந்திரம் கொண்டு வரப்பட்டு வாக்குப்பதிவு தொடங்கியது.

Tags:    

Similar News