செய்திகள்
மக்களை சந்திக்க எப்போதும் நாங்கள் பயந்தது இல்லை- உதயநிதி ஸ்டாலின் பேச்சு
மக்களை சந்திக்க எப்போதும் நாங்கள் பயந்தது இல்லை என்று தி.மு.க. தெற்கு மாவட்ட பொருளாளர் இல்ல திருமணவிழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
மணப்பாறை:
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொருளாளரும், பண்ணபட்டி முன்னாள் ஊராட்சி தலைவருமான ந.கோவிந்தராஜன் - அமுதவள்ளி தம்பதியினரின் மகன் என்ஜினீயர் கோ.சக்தி பிரகாஷ். இவர் தி.மு.க இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளரும், ஒன்றியக்குழு உறுப்பினராக உள்ளார். இவருக்கும், இலுப்பூர் வட்டம், பேயால் கிராமத்தைச் சேர்ந்த வை.ராமையா கவுண்டர் - சுந்தரி தம்பதியினரின் மகள் என்ஜினீயர் ரா.மது என்ற நந்தினி ஆகியோரது திருமணம் மணப்பாறையை அடுத்த பண்ணபட்டி ஊராட்சி பலவரப்பட்டியில் அமைக்கப்பட்டிருந்த கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது.
திருமண விழாவில் தி.மு.க இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்திப் பேசும்போது, கடந்த பாராளுமன்ற தேர்தலில் இருந்ததை விட அதிகமான எழுச்சியை தற்போது மக்களிடம் பார்க்க முடிகின்றது. இதே எழுச்சியையும் உற்சாகத்தையும் கவனமாக சட்டமன்ற தேர்தல் வரை எடுத்துச்சென்று மு.க.ஸ்டாலினை முதல்-அமைச்சராக அரியணை ஏற்றும் வரை நம் பணியை சிறப்பாக செய்வோம். மக்களை சந்திக்க எப்போதும் நாங்கள் பயந்தது இல்லை என்றார்.
முன்னதாக மாவட்டப் பொருளாளர் கோவிந்தராஜன் வரவேற்றார். திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ., கரூர் மாவட்டப் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி, ஜோதிமணி எம்.பி., புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினரும் மணமக்களை வாழ்த்திப் பேசினர். முடிவில் மணப்பாறை ஒன்றியச் செயலாளர் ராமசாமி நன்றி கூறினார்.
விழாவில், தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், வர்த்தகர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மணப்பாறைக்கு வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு தாரை தப்பட்டடை முழங்க ஆண்டவர் கோவில் பகுதியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.