சிவகாசியில் வங்கியில் உதவுவது போல் நடித்து மூதாட்டியிடம் நகைகள் அபேஸ்
விருதுநகர்:
சிவகாசி நாரணபுரம் சாலையை சேர்ந்தவர் கஸ்தூரி (வயது 65). இவர் முதியோர் பென்ஷன் பெறுவதற்காக சிவகாசி பஸ் நிலையம் அருகே உள்ள வங்கிக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் கஸ்தூரியிடம் நகைகள் அணிந்து சென்றால் முதியோர் ஓய்வூதியம் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என கூறினர்.
மேலும் நீங்கள் அணிந்திருக்கும் நகைகளை கழற்றி கொடுங்கள். அதனை பேப்பரில் மடித்து தருகிறோம் என கூறியுள்ளனர்.
இதனை நம்பிய கஸ்தூரி தனது கம்மல், வளையல் போன்றவற்றை கழற்றி கொடுத்துள்ளார். அதை பேப்பரில் சுற்றிய வாலிபர்கள் கஸ்தூரி வைத்திருந்த மஞ்சள் பையில் வைத்தனர். பின்னர் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு எங்கு உள்ளது என அவர்கள் கேட்டனர். அதற்கு கஸ்தூரி மஞ்சள் பையில் தான் உள்ளது என கூறினார்.
இதனை தொடர்ந்து அந்த பையை வாங்கிக்கொண்டு வங்கிக்குள் நுழைந்த வாலிபர்கள் பின்னர் தலைமறைவாகிவிட்டனர். நீண்ட நேரமாகியும் அவர்கள் வராததால் ஏமாற்றத்திற்கு உள்ளான கஸ்தூரி, தனது பேரன் பாலகுருவுக்குக தகவல் கொடுத்தார். அவர் விரைந்து வந்து வங்கி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேடிப்பார்த்தும் 2 வாலிபர்களையும் கண்டறிய முடியவில்லை.
இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. வங்கியில் மூதாட்டிக்கு உதவுவது போல் நடித்து நகைகளை பறித்துச் சென்ற 2 வாலிபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.