செய்திகள்
அரிவாள் வெட்டு

திண்டுக்கல் அருகே வழிப்பறி கொள்ளையரை பிடிக்க முயன்ற 3 பேருக்கு அரிவாள் வெட்டு

Published On 2019-07-20 10:32 GMT   |   Update On 2019-07-20 10:32 GMT
திண்டுக்கல் அருகே வழிப்பறி கொள்ளையரை பிடிக்க முயன்ற 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:

மதுரை மாவட்டம் பெரியஊர்சேரி பகுதியில் இருந்து 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக நடந்து சென்ற ஒரு பெண்ணின் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயன்றனர்.

அவர் கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் வருவதை பார்த்ததும் கொள்ளையர் அந்த பெண்ணை கீழே தள்ளி விட்டு தப்பி ஓடினர்.

அவர்கள் சென்ற வாகனத்தின் எண்ணை வைத்து நத்தம் செக்போஸ்ட் காவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பாலமேடு வழியாக திண்டுக்கல் மாவட்டம் முளையூர் அருகே அவர்கள் வந்துகொண்டிருந்தபோது கொள்ளையர் வந்த வாகனத்தை கிராம மக்கள் மறித்தனர்.

இதனால் சுதாரித்த கொள்ளையர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் கத்தியால் சரமாரியாக வெட்ட தொடங்கினர். இதில் முளையூரை சேர்ந்த பொன்முத்து (வயது24), மோகன் (40), சாமியார் (43) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதனால் மேலும் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் கொள்ளையர்களை சுற்றி வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்து நத்தம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் அரிவாள் வெட்டில் காயம் அடைந்த 3 பேரையும் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பிடிபட்ட கொள்ளையர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணான பதில் அளித்தனர். தொடர்ந்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி, சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்முருகன், பாண்டியன், கருப்புத்துரை ஆகியோர் தீவிர விசாரணை நடத்தியதில் சிவகங்கை மாவட்டம் படமாத்தூரை சேர்ந்த வெள்ளைச்சாமி (19), அரசணிபட்டியை சேர்ந்த ரோஜாமுத்து (18) என தெரிய வந்தது.

தொடர்ந்து இவர்கள் வேறு ஏதேனும் திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுள் ளனரா? என விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட கொள்ளையர்கள் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News