வழிபாடு
கோனியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா நடைபெற்ற போது எடுத்த படம்.

கோவை கோனியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா

Published On 2022-02-16 06:56 GMT   |   Update On 2022-02-16 06:56 GMT
கோனியம்மன் கோவிலில் 23-ந் தேதி முதல் மார்ச் 1-ந் தேதி வரை அம்மன் புலி வாகனம், கிளி வாகனம், சிம்ம வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம், வெள்ளை யானை வாகனம் ஆகிய வாகனங்களில் வீதி உலா வருகிறார்.
கோவையின் காவல்தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் முகூர்த்தக்கால் நடுதலுடன் தொடங்கியது.

அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு 9 மணி அளவில் பூச்சாட்டு விழா நடந்தது. இதற்காக வெறைட்டிஹால் ரோடு தேவேந்திரன் வீதியில் இருந்து பூக்கம்பம் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

பின்னர், அந்த கம்பம் கோவிலில் இருந்து தொடங்கி வைசியாள் வீதி, கற்பககவுண்டர் வீதி, ராஜவீதி, ஒப்பணக்கார வீதி வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கோவிலை வந்து அடைந்தது.

கோவிலுக்கு பூக்கம்பம் வந்ததும் மீண்டும் பூஜை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் கம்பம் நடப்பட்டது. அதற்கு ஏராளமான பெண்கள் புனிதநீர் ஊற்றி வழிபட்டனர். இதில் கோவில் செயல் அலுவலர் செல்வம் பெரியசாமி, முன்னாள் அறங்காவலர் ராம்கி, ரெயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.சண்முகம் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து வருகிற 21-ந் தேதி கிராம சாந்தி, 22-ந் தேதி இரவு 7.30 மணிக்கு கொடியேற்றம், அக்னிசாட்டு நடைபெறுகிறது.

மேலும் 23-ந் தேதி முதல் மார்ச் 1-ந் தேதி வரை அம்மன் புலி வாகனம், கிளி வாகனம், சிம்ம வாகனம், அன்ன வாகனம், காமதேனு வாகனம், வெள்ளை யானை வாகனம் ஆகிய வாகனங்களில் வீதி உலா வருகிறார்.

தொடர்ந்து அடுத்த மாதம் (மார்ச்) 1-ந் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர்த்திருவிழா 2-ந் தேதி மதியம் 2 மணியளவில் நடக்கிறது. மேலும் 3-ந் தேதி பரிவேட்டை, குதிரை வாகனம், 4-ந் தேதி தெப்பத்திருவிழா, 5-ந் தேதி தீர்த்தவாரி, யாளி வாகனம் கொடி இறக்கம், 7-ந் தேதி வசந்த விழாவுடன் தேர் திருவிழா நிறைவடைகிறது.
Tags:    

Similar News