ஆன்மிகம்
தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்ற போது எடுத்த படம்.

நெல்லையப்பர்-தென்காசி கோவில்களில் அன்னாபிஷேகம்

Published On 2019-11-13 03:58 GMT   |   Update On 2019-11-13 03:58 GMT
ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நெல்லையப்பர் கோவில், தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன்கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது.
நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி நேற்று காலை 8 மணிக்கு கும்ப பூஜையும், சிறப்பு யாகமும், அபிஷேக அலங்கார தீபாராதனையும் நடந்தது. மதியம் 12 மணிக்கு நெல்லையப்பருக்கு அன்னத்தால் அபிஷேகம் நடந்தது. பகல் 12.30 மணிக்கு அன்னத்தால் அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதியம் 1 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட அன்னம் பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. இதையொட்டி நெல்லையப்பர் கோவிலில் உள்ள மகாலிங்க சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.

பாளையங்கோட்டை சிவன்கோவில் என்று அழைக்கப்படுகின்ற கோமதி அம்பாள் சமேத திரிபுராந்தீசுவரர் கோவிலில் நேற்று சுவாமிக்கு அன்னாபிஷேகமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை அருகே உள்ள பாலாமடை மங்களநாயகி சமேத மங்களாங்குரேசுவரர் கோவிலில் நேற்று ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி சுவாமிக்கு அன்னத்தால் அபிஷேகமும், அன்னத்தால் அலங்கார தீபாராதனை நடந்தது.

தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சுவாமி சன்னதி, அம்மன் சன்னதி, பாலமுருகன் சன்னதி ஆகியவற்றில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதைத்தொடர்ந்து அம்மன் சன்னதி மண்டபத்தில் சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதன்பிறகு அன்னாபிஷேகத்தில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னாபிஷேக நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி யக்ஞ நாராயணன் மற்றும் கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

அம்பை ஊர்க்காடு தாமிரபரணி நதிக்கரையில் ராமர் கோவில் அருகில் அமைந்துள்ள லோகேஸ்வர அம்பாள் சமேத சிவபால சக்தி ஈஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதே போல் அம்பை அம்மையப்பர் கோவிலிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News