செய்திகள்
காஷ்மீர் நடவடிக்கையால் அப்பாவி குழந்தைகள் அதிகம் பாதிப்பு - பிரியங்கா
காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பாத காரணத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அப்பாவி பள்ளிக் குழந்தைகள் தான் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.
புது டெல்லி:
காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் அதிர்வலைகளை கிளப்பியது.
இந்த நடவடிக்கையையொட்டி பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மாநிலம் முழுவதும் ஊரடங்கு, 144 தடை, தொலைதொடர்பு துண்டிப்பு என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. குறிப்பாக அரசு போக்குவரத்து, ரெயில் சேவை, அனைத்தும் முடங்கி உள்ளன. பள்ளிகள் கல்லூரிகளும் அதிக அளவில் இயங்கவில்லை. திறக்கப்பட்ட பள்ளிகளிலும் மாணவர்கள் வரவில்லை.
இந்நிலையில், காஷ்மீர் நிலைமை குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மோடி அரசை விமர்சித்துள்ளார். ஒரு ஊடக அறிக்கையையும் சேர்த்து சுட்டிக்காட்டிய பிரியங்கா, “ஜம்மு காஷ்மீரில் இரண்டு மாத காலமாக இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதன் காரணமாக அதிகளவில் பாதிப்படைந்துள்ளவர்கள் பள்ளி செல்லும் குழந்தைகள் தான். நாட்டின் வளர்ச்சியை பற்றி பேசிக்கொண்டு, மாணவர்களை பள்ளிக்கு செல்லவிடாமல் தடுக்கும் அரசை எங்காவது பார்த்ததுண்டா? வருங்கால சந்ததியினருக்கு பாஜக அரசு என்ன சொல்ல வருகிறது?” என தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்.