திண்டுக்கல் லியோனி சர்ச்சை பேச்சு எதிரொலி: பெண்களை இழிவுபடுத்தி பிரசாரம் செய்யக் கூடாது - கனிமொழி
சென்னை:
தி.மு.க.வில் நட்சத்திர பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான திண்டுக்கல் ஐ.லியோனி தமிழகம் முழுவதும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.
அவர் பிரசாரத்தில் பேசும்போது, பெண்களை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் வகையில் கேலி-கிண்டல் செய்து பேசினார். அவரது பேச்சு சமூக வலைதளத்தில் பரவியது. இது கடும் சர்ச்சைக்குள்ளானது.
இந்த நிலையில், பெண்களை இழிவுபடுத்தி பேசியதற்கு தி.மு.க. மகளிர் அணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு அறிவுரையும் வழங்கி உள்ளார்.
இது தொடர்பாக கனிமொழி விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
அரசியல் கட்சி தலைவர்கள் யாராக இருந்தாலும் பெண்களை இழிவுபடுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது. இதை எல்லோருமே மனதில் வைத்துக்கொண்டால் இந்த சமூகத்திற்கு நல்லது. இது திராவிட இயக்கமும், பெரியாரும் விரும்பிய சமூக நீதி ஆகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.