தொழில்நுட்பம்
இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் சீன நிறுவனங்கள்
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சீனாவை சேர்ந்த பிராண்டுகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Smartphone
இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சீன பிராண்டுகளின் ஆதிக்கம் 2019 ஆண்டின் முதல் காலாண்டில் மிக வேகமாக அதிகரித்து இருக்கிறது. 2019 முதல் காலாண்டு காலத்தில் மட்டும் சீன ஸ்மார்ட்போன் பிராண்டுகள் இந்திய சந்தையில் சுமார் 66 சதவிகித பங்குகளை பெற்றிருக்கிறது.
இதில் சியோமி பிராண்டு முன்னணி இடம் பிடித்துள்ளது. கவுண்ட்டர்பாயின்ட் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கையில் இந்திய சந்தையில் சீன பிராண்டுகள் 20 சதவிகித வருடாந்திர வளர்ச்சியை பதிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய வளர்ச்சிக்கு விவோ, ரியல்மி மற்றும் ஒப்போ போன்ற பிராண்டுகள் முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றன.
விவோ நிறுவனம் வருடாந்திர அடிப்படையில் 119 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. இதைத் தொடர்ந்து ஒப்போ 28 சதவிகித வருடாந்திர வளர்ச்சியை பெற்றிருக்கிறது. இந்திய சந்தையில் சியோமி பிராண்டு 29 சதவகித பங்குகளுடன் முதலிடத்திலும் சாம்சங் பிராண்டு 23 சதவிகித பங்குகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
தொடர் வியாபாரம் செய்ய சர்வதேச அளவில் மட்டுமின்றி சீன நிறுவனங்களுக்கு இந்தியா மிகச்சிறந்த சந்தையாக விளங்குகிறது. இந்தியாவில் டேட்டா பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால், மற்ற பகுதிகளை விட பயனர் மிக வேகமாக தங்களது சாதனங்களை அப்கிரேடு செய்கின்றனர்.
இந்திய சந்தையில் ரெட்மி 6ஏ அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போனாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து ரெட்மி நோட் 6 ப்ரோ, ரெட்மி வை2, கேலக்ஸி எம்20 மற்றும் கேலக்ஸி ஏ50 உள்ளிட்டவை அடுத்தடுத்து அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களாக இருக்கின்றன.
இந்தியாவில் விற்பனையாகும் மொத்த ஸ்மார்ட்போன்களில் டாப் 10 மாடல்கள் மட்டும் சுமார் 32 சதவிகிதமாக இருக்கின்றன. இந்தியாவில் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரையிலான ஸ்மார்ட்போன்களின் விற்பனை 240 சதவிகித வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது.