செய்திகள்
விவசாயிகளுக்கு ஆதரவாக சித்து தலைமையில் காங்கிரஸ் போராட்டம்
வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் அமிர்தசரசில் நடந்த போராட்டத்தில் சித்து பங்கேற்றார்.
புதுடெல்லி:
வேளாண் சீர்திருத்த மசோதாக்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும் எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவின் முல்லான்பூரில் இருந்து காங்கிரஸ் கட்சியினர் மற்றும் விவசாயிகள் இணைந்து டிராக்டர் பேரணி நடத்தினர். விவசாயிகளுக்கு ஆதரவாக அமிர்தசரஸ் நகரில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் எம்எல்ஏவும் முன்னாள் மந்திரியுமான நவ்ஜோத் சிங் சித்து கலந்துகொண்டார். பதாகையை கையில் ஏந்தியபடி மத்திய அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பினார்.
மத்திய அரசு கொண்டு வந்து நிறைவேற்றி உள்ள சட்டத்திருத்த மசோதாக்கள், வேளாண் சமூகத்தை அழித்துவிடும் என்று சித்து கூறியது குறிப்பிடத்தக்கது.