செய்திகள்
கோப்புபடம்

திசையன்விளை அருகே விபத்து: கார் கவிழ்ந்து 3 நண்பர்கள் பலி

Published On 2021-07-19 02:22 GMT   |   Update On 2021-07-19 02:22 GMT
திசையன்விளை அருகே கார் கவிழ்ந்து 3 நண்பர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
திசையன்விளை:

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே மன்னார்புரத்தைச் சேர்ந்தவர்கள் பொன்சேகர்(வயது40), ரெனிஸ் வாலன்(27), வில்சன் ரஜினிராஜா (35), அதிர்ஷ்டபாலன், செல்வம். பக்கத்து ஊரான கல்விளையைச் சேர்ந்தவர் ஸ்டீபன்.

நண்பர்களான இவர்கள் 6 பேரும் நேற்று மாலையில் ஒரு காரில் திசையன்விளை அருகே உள்ள பெட்டைகுளம் கிராமத்துக்கு சென்றனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காரில் தங்களது ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை ஸ்டீபன் ஓட்டினார்.

மன்னார்புரம் சந்திப்பு பகுதியில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக கார் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த இந்த கோர விபத்தில், காரில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்ட பொன் சேகர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

மேலும் காரில் இருந்த ரெனிஸ் வாலன், வில்சன் ரஜினிராஜா உள்ளிட்ட 5 பேரும் படுகாயங்களுடன் உயிருக்கு போராடியவாறு கிடந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த திசையன்விளை போலீசார் படுகாயம் அடைந்த 5 பேரையும் மீட்டு நாங்குநேரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி ரெனிஸ் வாலன், வில்சன் ரஜினிராஜா ஆகிய 2 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.

படுகாயமடைந்த அதிர்ஷ்டபாலன், செல்வம், ஸ்டீபன் ஆகிய 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News