ஆன்மிகம்
பக்தர்கள் கடலில் புனித நீராட தடை விதிக்கப்பட்டதால், கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.

புத்தாண்டையொட்டி பக்தர்கள் குளிக்க தடை: திருச்செந்தூர் கோவில் கடற்கரை வெறிச்சோடியது

Published On 2021-01-01 04:03 GMT   |   Update On 2021-01-01 04:03 GMT
புத்தாண்டையொட்டி பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டதால், திருச்செந்தூர் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.
ஆண்டதோறும் ஆங்கில புத்தாண்டு தினத்தன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்வது வழக்கம். இதற்காக, பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமின்றி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் புத்தாண்டு முதல் நாளில் திருச்செந்தூர் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

ஆனால், இந்தாண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் மாதம் மார்கழி முதல் நாளில் இருந்து தினசரி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் மற்ற கால பூஜைகள் தொடர்ந்து நடந்தது. ஆனால், பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர்.

அதேசமயம் புத்தாண்டையொட்டி நேற்றும், இன்றும் பக்தர்கள் கடற்கரைக்கு செல்லவோ, கடலில் புனித நீராடவோ தடை விதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்த தடை விதிக்கப்பட்டது.

இதன் காரணமாக கடற்கரை பகுதியில் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். பக்தர்கள் கோவில் பகுதியில் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அதனால் நேற்று திருச்செந்தூர் கோவில் கடற்கரை பக்தர்களின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
Tags:    

Similar News