செய்திகள்
கொலை

குலசேகரன்பட்டினத்தில் இன்று காலை ரூ.500 தகராறில் மனைவியை வெட்டிக்கொலை செய்த தொழிலாளி

Published On 2021-10-11 09:34 GMT   |   Update On 2021-10-11 09:34 GMT
குலசேகரன்பட்டினத்தில் இன்று காலை ரூ.500 தகராறில் மனைவியை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் கருங்காளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுடலை (வயது 70).தொழிலாளி. இவரது மனைவி முத்தம்மாள் (65).

இவர்களுக்கு ஒரு மகனும், 3 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி குடும்பத்துடன் வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.

வீட்டில் சுடலை, முத்தம்மாள் மட்டும் இருந்தனர். இந்நிலையில் இன்று காலை சுடலை வைத்திருந்த ரூ.500-ஐ காணவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் தனது மனைவியிடம் கேட்டுள்ளார். அதற்கு முத்தம்மாள், நான் பணத்தை பார்க்கவில்லை என கூறினார்.

ஆனால் சுடலை நீதான் பணத்தை எடுத்திருக்கிறாய் எனக்கூறி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆவேசம் அடைந்த அவர் அரிவாளால் மனைவியை வெட்டிக்கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். அப்போது முத்தம்மாள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து குலசேகரன் பட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய சுடலையை போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News