உள்ளூர் செய்திகள்
மஞ்சூர் அருகே 14 ஊர் படுகர் இன மக்கள் பங்கேற்ற கோவில் திருவிழா
படுகர் இன மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மஞ்சூர்,
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள கரியமலையில் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. சுற்றுவட்டார பகுதிகளில் பிரசித்தி பெற்ற இக்கோவிலின் வருடாந்திர திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து நேற்று காலை அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்களுடன் சிறப்பு பூைஜகள் மற்றும் மகா தீபாராதனை நடத்தப்பட்டது. இதில் குந்தை சீமைக்குட்பட்ட 14 ஊர்களை சேர்ந்த படுகர் இன மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
தொடர்ந்து அனைவரும் வரிசையில் நின்றபடி பாரம்பரிய வழக்கப்படி காணிக்கை செலுத்தினார்கள். விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டதுடன் கரியமலை ராம பால சங்கீத சபா சார்பில் ‘தப்பரி குன்னவெ’ என்ற படுக சமூக நாடகம் மற்றும் பாரம்பரிய நடனம், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழா விற்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் போஜன் தலைமையில் விழா கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்திருந்தனர்.