செய்திகள்
அமித்ஷா என்ன தூங்கிக்கொண்டு இருக்கிறாரா? அசாதுதீன் ஓவைசி சரமாரி கேள்வி
ரோகிங்கியாக்கள் வாக்களர்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் என்றால் உள்துறை மந்திரி அமித்ஷா என்ன தூங்கிக்கொண்டு இருக்கிறாரா? என அசாதுதீன் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் 150 வார்டுகளை கொண்ட ஐதராபாத் மாநகராட்சிக்கான தேர்தல் டிசம்பர் 1-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 4-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
இந்த தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ், பாஜக, அசாதுதீன் ஓவைசியின் அனைத்திந்திய மஜ்லிஸ் இ இத்திஹாதுல் முஸ்லிமீன் (எஐஎம்ஐஎம்) உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.
இதையடுத்து, ஒவ்வொரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், எஐஎம்ஐஎம் கட்சி த்லைவரும் ஐதராபாத் எம்.பி.யுமான அசதுதீன் ஓவைசி நேற்று பிரசார நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-
வாக்காளர் பட்டியலில் ரோகிங்கியா அகதிகள் 30 ஆயிரம் பேர் இடம்பெற்றுள்ளனர் என்றால் உள்துறை மந்திரி அமித்ஷா என்ன செய்து கொண்டு இருக்கிறார்? அவர் என்ன தூங்கிக்கொண்டு இருக்கிறாரா?
30 - 40 ஆயிரம் ரோகிங்கியா அகதிகள் வாக்காளர் பட்டியலில் எப்படி இடம்பெற்றனர் என்று கண்டுபிடிப்பது அவரின் வேலை தானே? பாஜக நேர்மையான கட்சி என்றால் வாக்களர் பட்டியலில் இடம்பெற்ற 1000 ரோகிங்கியாக்களின் பெயர்களை நாளை மாலைக்குள் (இன்று) காண்பிக்கவேண்டும்.
வெறுப்புணர்வை உருவாக்குவதே அவர்களின் (பாஜக) நோக்கம். இது ஐதராபாத்திற்கும் பாக்கியாநகருக்குமான போட்டி. இதில் யார் வெற்றிபெற வேண்டும் என்பதை முடிவு செய்வது உங்கள் பொறுப்பு.
என்றார்.