செய்திகள்
கோப்புபடம்

ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரச்சினை: டாஸ்மாக் கடையில் மோதல் - ஜெயிலர் உள்பட 2 பேர் மீது வழக்கு

Published On 2021-09-19 08:03 GMT   |   Update On 2021-09-19 08:03 GMT
விருதுநகர் அருகே டாஸ்மாக் கடையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரச்சனை தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ஜெயிலர் உள்பட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர்:

விருதுநகர் அருகே உள்ள காரியாபட்டி வில்லிபத்திரி பஞ்சாயத்து தலைவியாக இருந்து வருபவர் முத்துலட்சுமி.

கடந்த தேர்தலின்போது இந்த பஞ்சாயத்தில் உள்ள 9 வார்டுகளில் 3 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். 6 வார்டுகளில் தேர்தல் நடக்கவில்லை.

இந்த தேர்தலில் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தாரணி என்பவர் தோல்வி அடைந்தார். 6 வார்டுகளுக்கு வருகிற 9-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தாரணி தரப்பில் வேட்பாளரை நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன.

உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக முத்துலட்சுமி தரப்பினருக்கும், தாரணி தரப்பினருக்கும் பிரச்சினை இருந்து வந்தது.

இந்த நிலையில் முத்துலட்சுமி மகன் பொன்னுப்பாண்டி (24), அவரது நண்பர் முருகன் ஆகியோர் டாஸ்மாக் கடைக்கு வந்தனர். அங்கு தாரணி ஆதரவாளரான கார்த்திக், செல்வம் ஆகியோர் வந்தனர். கார்த்திக் அருப்புக்கோட்டை சப்ஜெயிலில் ஜெயிலராக பணியாற்றி வருகிறார்.

டாஸ்மாக் கடையில் இருதரப்பினருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் பொன்னுப்பாண்டியும், முருகனும் தாக்கப்பட்டனர். இந்த மோதலில் பொன்னுப்பாண்டி படுகாயம் அடைந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக விருதுநகர் பாண்டியன் நகர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் ஜெயிலர் கார்த்திக் மற்றும் செல்வம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஜெயிலர் கார்த்திக் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

இந்த சம்பவம் விருதுநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News