கேரளாவில் சுகாதார துறை பெண் மந்திரியை அவதூறாக பேசிய வாலிபர் கைது
திருவனந்தபுரம்:
கேரள மாநில சுகாதாரதுறை மந்திரியாக இருப்பவர் வீணா ஜார்ஜ்.
மந்திரி வீணா ஜார்ஜ் பற்றி சமீபத்தில் ஒருவர் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்கள் பதிவிட்டார். மேலும் அவர் டெலிபோனில் தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகள் பேசினார்.
இதுபற்றி காக்கநாடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் கேரள சைபர் கிரைம் போலீசாரும் இதுபற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில் மந்திரி வீணா ஜார்ஜ் பற்றி சமூக வலை தளங்களில் அவதூறு பரப்பியது வாலிபர் நந்தகுமார் என தெரியவந்தது.
இவர் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் உள்ளன. இந்நிலையில் நந்தகுமார், மந்திரி வீணா ஜார்ஜ் பற்றியும் சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியது
கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்பட பல்வேறு பிரிவுகளின் நந்தகுமார் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.