செய்திகள்
அவிநாசி அருகே இன்று அதிகாலை விபத்து-மேம்பாலத்தில் அரசு சொகுசு பஸ் கவிழ்ந்து 13 பேர் காயம்
காயமடைந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக அவிநாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அவிநாசி:
பெங்களூருவில் இருந்து கோவைக்கு நேற்றிரவு அரசு சொகுசு பஸ் புறப்பட்டது. பஸ்சில் 42 பயணிகள் இருந்தனர். பஸ்சை டிரைவர் ராகவன் ஓட்டினார்.
இன்று அதிகாலை திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த நாதம்பாளையம் பிரிவு 6 வழிச்சாலை மேம்பாலத்தில் செல்லும் போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி பாலத்தின் நடுவில் உள்ள தடுப்புசுவரில் மோதி கவிழ்ந்தது. இதில் பஸ்சில் இருந்த 5 பெண்கள் உள்பட 13 பேர் காயமடைந்தனர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் அவிநாசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்த பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக அவிநாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. காயமடைந்த பயணிகள் விவரம் வருமாறு:-
ஓசூரை சேர்ந்த சின்னப்பன் (வயது 53),துரைசாமி(62), மேகநாதன்(40), மனோஜ்குமார் (28),முனிராஜ்(64), கிருஷ்ணகிரியை சேர்ந்த மனோன்மணி(43), கோகுலஸ்ரீ(39), கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த ரமேஷ் (56), பாப்பநாயக்கன் பாளையத்தை சேர்ந்த மூனார்ப்(41), குருவம்மாள் (43), தர்மபுரியை சேர்ந்த வாணிஸ்ரீ(33), சின்னம்மாள் (40), கருணாநிதி (43).
டிரைவர் ராகவன் தூங்கியதன் காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து காரணமாக மேம்பாலத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து ராட்சத கிரேன் கொண்டு வரப்பட்டு கவிழ்ந்த கிடந்த பஸ் நிலை நிறுத்தப்பட்டது.அதன்பிறகு அப்பகுதியில் போக்குவரத்து சீரானது. பயணிகளில் 3பேருக்கு கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.