செய்திகள்
கோப்புபடம்

15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: கூலித்தொழிலாளிகள் 2 பேருக்கு சிறை தண்டனை

Published On 2020-10-23 08:55 GMT   |   Update On 2020-10-23 08:55 GMT
மல்லசமுத்திரம் அருகே 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கூலித்தொழிலாளிகள் 2 பேருக்கு சிறை தண்டனை விதித்து நாமக்கல் மகளிர் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே உள்ள இ.புதுப்பாளையத்தை சேர்ந்தவர் சின்னதம்பி (என்கிற) பொம்முநாயக்கர் (வயது 28). இவரது நண்பர் ராமசாமி என்கிற கதிர்வேல் (29). இருவரும் கூலித்தொழிலாளிகள்.

இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந் தேதி சின்னதம்பி அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை கடத்தி சென்று இளம்வயது திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த கடத்தல் மற்றும் இளம்வயது திருமணத்திற்கு ராமசாமி உடந்தையாக இருந்தார்.

சிறுமியின் பெற்றோர் மல்லசமுத்திரம் போலீசில் புகார் செய்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னதம்பி, ராமசாமி ஆகிய இருவரையும் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு நாமக்கல் மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட சின்னதம்பிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதமும், ராமசாமிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. இதையடுத்து சிறை தண்டனை விதிக்கப்பட்ட இருவரும் கோவை சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
Tags:    

Similar News