பாலக்காடு அருகே லாரியில் இருந்த கிரானைட் கற்கள் சரிந்து 2 தொழிலாளிகள் பலி
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கோட்டாயி அடுத்த செருக்குளத்தை சேர்ந்தவர்கள் ஸ்ரீதரன் (வயது52), விஸ்வநாதன்.
இவர்கள் தனது நண்பர்களான தங்கப்பன், வாசுதேவன் ஆகியோருடன் அந்த பகுதியில் கட்டப்பட்டு வரும் ஐ.டி.எல்.பங்களாவில் வேலை பார்த்து வந்தனர். சம்பவத்தன்று அந்த பங்காளவில் பதிப்பதற்காக வடமாநிலத்தில் இருந்து கன்டெய்னர் லாரி மூலம் கிரானைட் கற்கள் கொண்டு வரப்பட்டது. பின்னர் கிரானைட் கற்களை லாரியில் ஏறி ஸ்ரீதரன் உள்பட 4 பேரும் இறக்கி கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக லாரியில் இருந்த கிரானைட் கற்கள் சரிந்து விழுந்தது. இதில் ஸ்ரீதரன், விஸ்வநாதன் ஆகியோர் சிக்கி கொண்டனர். தங்கப்பன், வாசுதேவன் ஆகியோர் சுதாரித்து கொண்டு லாரியில் இருந்து கீழே குதித்து உயிர் தப்பினர். இதில் இடிபாடுகளில் சிக்கி ஸ்ரீதரன், விஸ்வநாதன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து கோட்டாயி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் பாலக்காடு, ஆலத்தூர் பகுதியை சேர்ந்த தீயணைப்பு வீரர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளில் சிக்கி பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோட்டாயி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.