செய்திகள்
சர்தார் வல்லபாய் பட்டேல் சிலைக்கு மரியாதை செலுத்திய பிரதமர் மோடி
சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளையொட்டி குஜராத்தில் உள்ள பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
கெவாடியா:
இந்தியாவின் இரும்பு மனிதரும், சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியுமான சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினம் இன்று தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சர்தார் படேலுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மரியாதை செலுத்திவருகின்றனர்.
பட்டேல் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி குஜராத் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்றடைந்த பிரதமரை முதலமைச்சர் விஜய் ரூபானி, ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத் ஆகியோர் வரவேற்றனர்.
இன்று நர்மதை மாவட்டத்தின் கெவாடியா என்ற கிராமத்திற்கு சென்ற மோடி, அங்கு பட்டேல் சிலைக்கு (ஒற்றுமைக்கான சிலை) மரியாதை செலுத்தினார். அங்கு தேசிய ஒற்றுமை தின அணிவகுப்பு நடைபெற்றது. இதனை பிரதமர் பார்வையிட்டார்.
முன்னதாக கெவாடியாவில் உள்ள ஏக்தா மால் என்னும் கைவினைப்பொருட்கள் கண்காட்சி மையத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்து பார்வையிட்டார்.